Posted in

பாகிஸ்தானை கதறவிடும் தாலிபான்கள்.. 16 அணு விஞ்ஞானிகளை கடத்திய டிடிபி.. வெடிகுண்டு தயாரிக்க முடிவு?

 

காபூல்: ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் இடையே எல்லையில் மோதல் நடந்து வருகிறது. இதற்கிடையே தான் பாகிஸ்தானுக்குள் நுழைந்த டிடிபி அமைப்பினர் பாகிஸ்தான் அணுசக்தி திட்டத்தின் கீழ் சுரங்கத்தில் பணியாற்றும் 16 பேரை கடத்தி சென்றுள்ளனர்.இவர்களை வைத்து வெடிகுண்டு தயாரிக்க டிடிபி அமைப்பினர் திட்டமிட்டுள்ளதாக திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.

பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் இடையேயான மோதல் என்பது வலுத்துள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து செயல்படும் டிடிபி எனும் தெஹ்ரீக் இ தாலிபான் பாகிஸ்தான் அமைப்பினர், பாகிஸ்தானுடன் கடுமையாக சண்டையிட்டு வருகின்றனர்.

இருநாட்டு எல்லையில் டிடிபி எனும் பாகிஸ்தான் தாலிபான்கள், பாகிஸ்தான் ராணுவத்தை குறிவைத்து தாக்குதலை தொடங்கி உள்ளது. கடந்த 2 வாரமாக இந்த மோதல் நடந்து வருகிறது. இது பாகிஸ்தானுக்கு பெரிய சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தான் தாலிபான்களை எப்படி கட்டுப்படுத்துவது என்பது தெரியாமல் பாகிஸ்தான் தவித்து வருகிறது. இந்நிலையில் தான் எல்லையை தாண்டி பாகிஸ்தானுக்குள் நுழைந்த டிடிபி அமைப்பினர் 16 பேரை கடத்தி சென்றுள்ளனர். ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் எல்லையையொட்டி பாகிஸ்தானின் கைபர் பக்துன்வா மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தின் லக்கி மார்வத் மாவட்டத்தில் நுழைந்த தாலிபான்களில் காரில் பதுங்கி இருந்தனர்.

அப்போது அந்த வழியாக வாகனத்தில் பாகிஸ்தான் அணுசக்தி திட்டத்தின் கீழ் சுரங்கம் ஒன்றில் பணியாற்றும் நபர்கள் பணிக்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. அதனை கவனித்த டிடிபி அமைப்பினர் அந்த வாகனத்தை தடுத்து நிறுத்தி தீவைத்து எரித்தனர். மேலும் அதில் இருந்த சயின்ஸ்டிஸ்ட், பணியாளர்கள் என்று மொத்தம் 16 பேரையும் டிடிபி அமைப்பினர் காரில் கடத்தி ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்தனர். இதுபற்றி பாகிஸ்தான் விசாரணை அதிகாரிகள் , ‛‛கடத்தப்பட்டவர்கள் சயின்ஸ்டிஸ்ட் அல்ல. அவர்கள் சாதாரண நபர்கள் தான்’’ என்று கூறியுள்ளது. இருப்பினும் பாகிஸ்தான் அரசு, தூதரகம் சார்பில் எந்த கருத்தும் இன்னும் தெரிவிக்கப்படவில்லை. இதற்கிடையே தான் வீடியோ ஒன்று பத்திரிகையாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அந்த வீடியோவில் கடத்தி செல்லப்பட்ட நபர்கள் இடம்பெற்று இருந்தனர். அவர்கள் பாகிஸ்தான் அரசுக்கு, கடத்தல்காரர்களின் கோரிக்கையை நிறைவேற்றும்படி வீடியோவில் கோரிக்கை வைத்தனர். ஆனாலும் அந்த கோரிக்கை என்ன என்பது சரியாக தெரிவிக்கப்படவில்லை. இந்த சம்பவம் தற்போது இருநாடுகள் இடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் கடத்தப்பட்டவர்களில் அணு சக்தி கமிஷனில் பணியாற்றுபவர்கள் என்று சொல்லப்படுகிறது. இதனை பாகிஸ்தான் மறுத்தாலும் கூட கடத்தப்பட்டவர்கள் வைத்திருக்கும் அடையாள அட்டை அதனை உறுதி செய்துள்ளது. பாகிஸ்தான் ஏற்கனவே அணுஆயுதம் வைத்திருக்கும் நாடாக உள்ளது. அணுகுண்டும் வைத்துள்ளது. இந்த அணுகுண்டு மீது டிடிபி அமைப்பு சில ஆண்டுகளாக கண்வைத்து வந்தது.

இந்நிலையில் சரியான திட்டமிடலுடன் டிடிபி அமைப்பினர் இந்த கடத்தல் சம்பவத்தை நிகழ்த்தி உள்ளதாக கூறப்படுகிறது. அதோடு தற்போதைய கடத்தல் சம்பவத்தின்போது அவர்கள் யுரேனியத்தையும் திருடி சென்றதாக சொல்லப்படுகிறது. இதனை வைத்து டிடிபி அமைப்பினர் Dirty bombs செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. Dirty Bombs என்பது ஒரு வகையான வெடிகுண்டு தான். வெடிக்கும் பொருள் மட்டுமின்றி ரேடியோ கதிரியக்கத்தை வெளியிடும் பொருட்களை வைத்து இந்த குண்டு தயாரிக்கப்படும். இந்த குண்டுக்கு இன்னொரு பெயரும் உள்ளது. ஆர்டிடி என்றும் சொல்வார்கள்.

 அதாவது Radiological Dispersal Device என்பது தான் இதன் விரிவாக்கமாகும். இந்த குண்டை வைத்து டிடிபி அமைப்பினர் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளது. இந்த தாக்குதல் நடந்தால் அது பெரிய பின்விளைவுகளை ஏற்படுத்தும். இதனால்இந்த சம்பவம் பாகிஸ்தானுக்கு பெரிய சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

For the past two decades, Mr. Kannan has served as the Editor of Athirvu News. A veteran of the diaspora, he stands as a highly respected and seasoned journalist, shaping the voice of the Tamil community for over 20 years.